கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில அமைக்கப்பட்டிருந்த தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும் பெரிய ஜூம்மா பள்ளவாசலின் 29 பேர் இணைந்து இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
கிராமத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்காக நூலகம் ஒன்றை நிர்மாணிக்க காணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் நிதியுதவியில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம். அக்பர் கான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில், மற்றுமொரு பள்ளிவாசல் அவசியமில்லை என்பதால், பெரிய பள்ளிவாசலின் செயற்குழுவுடன் இணைந்து பள்ளிவாசலை உடைக்க தீர்மானித்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் மடாடுகமை பிரதேச மக்களுடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்டிருந்த பள்ளிவாசலை உடைத்துள்ளனர். அரபு மொழியில் எழுப்பட்டிருந்த பெயர் பலகையும் கழற்றப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலை நிர்மாணிக்க வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்துள்ளதாகவும் பணம் வழங்கியவர்களின் பெயர்கள் அரபுமொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை மடாடுகமை பிரதேசவாசியான மொஹமட் அமீன் என்பவர் கூறுகையில், உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு பெயர் இருக்கவில்லை. முஸ்லிம் பள்ளிவாசல் எனக் கூறினாலும் அதில் தவ்ஹித் ஜமாத் அமைப்பினரே தொழுகை நடத்தி வந்தனர் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களுடன் பல காலமாக மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதாகவும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் காரணமாக அதற்கு பங்கம் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் மடாடுகமை ஜூம்மா பள்ளிவாசல் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதனால், கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து கலந்துரையாடி, பிரதேச மக்களுடன் இணைந்து செயற்பட தடையாக இருக்கும் வெளிநாடுகளின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பள்ளவாசலை இடிக்க தீர்மானித்தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.






