ஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமராக நேற்றையதினம் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி குறுகிய கால விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜூன் மாதம் 7 அல்லது 8 ஆம் திகதி பிரதமர் மோடி மாலைதீவுக்கு செல்லவுள்ளார். இதன்போது அவர் செல்லும் வழியில் அல்லது மாலைதீவு பயணத்தை முடித்த பின்னர் வரும் வழியில் இலங்கையில் தரித்து நிற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாலைதீவுக்கான பிரதமர் மோடியின் பயணத் திட்டம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு எதுவித தகவலையும் தெரிவிக்காத நிலையில் தமது நாடடுக்கு ஜூன் மாத முற்பகுதியில் வருகை தரும் பிரதமர் மோடி தமது நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றுவார் என மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கம் புதுடெல்லி இலங்கை மக்களுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக துணை நிற்கும் என்பதாகும்.

கொழும்பில் தங்கிநிற்கும்வேளை உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவிப்பார்.

இதேவேளை பிரதமர் மோடியின் இரண்டாவது முறையான பதவியேற்பு நிகழ்வில் ஸ்ரீலங்காஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தாக்குதல் நடக்கவுள்ளதாக இந்தியா ஏற்கனேவே எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.