யாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்!

யாழில் அவதானமின்றி மூல வெடி கொளுத்திய குடும்பத்தலைவர் இரு கண்களையும் கை ஒன்றை முழங்கையுடனும் இழந்துள்ளளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது – 33) என்பவரே இந்த வெடிவிபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தனது சகோதரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவர் வெடிகளைக் கொளுத்தினார். அதன் போது அவர் மூல வெடிகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து கொளுத்தியுள்ளார். அவை கைகளுக்குள் வெடித்துள்ளன. அதனால் அவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த குடும்பத்தலைவரை அங்கிருத்தவர்கள் மீட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்த்தனர். கண்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குடும்பத்தலைவரின் ஒரு கை முழங்கையின் கீழ் சிதைவடைந்தமையால் அதனை சத்திர சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினார்கள். அத்துடன் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பொறுப்பற்ற வகையில் இவ்வாறு வெடிபொருள்களை வெடிக்கவைத்தால் உயிருக்கும் ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.