இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கோடை விடுமுறையின் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா வெளிவிவகார அலுவலகத்தினால் இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல், இயற்கை அனர்த்தம் உட்பட ஆபத்துக்கள் தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயண எச்சரிக்கையில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்துமாறு பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வெளிநாட்டவர்கள் அதிகம் உள்ள இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக மிகவும் அவதானமாக செயற்படுமாறு பிரித்தானியா எச்சரித்துள்ளது.