சினமன் கிரேன்ட் ஹொட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹொட்டல் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்றின் பிரதான சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் 62 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலுமினியம், பித்தளை மற்றும் இரும்பு உள்ளிட்ட கொள்கலன் ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் இன்சாப் அஹமட் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டபோது, அவர் நீதிமன்றில் முன்னிலையானதாக கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா தெரிவித்துள்ளார்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் இன்சாப் அஹமட் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி கிரேன்பாஸ் பொலிஸார், வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.