இறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்து சென்ற பொலிஸார் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள் !

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த நபர் ஒருவரின் மரண சடங்கை நிறுத்திய பொலிஸார் இறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்துக் சென்றிருக்கின்றனர்.

இச் சம்பவம் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள நாவலடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நடைபெற்றது. அது குறித்து தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த பெரியான் நாகேந்திரம் (67) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது, மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர்.

அதனையடுத்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்படவருக்கு யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் சாவகச்சேரி வைத்திய சாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 4மாத காலமாக படுக்கை நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தவரை, கடந்த செவ்வாய்கிழமை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இரண்டு நாளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை அவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து மறுநாள் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து இறுதி கிரியைகள் நடைபெற்றன.

அதனை அறிந்து குறித்த வீட்டிற்கு சென்ற சாவகச்சேரி காவல்துறையினர், விபத்து வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது போது, தமக்கு அறிவிக்காது இறுதிகிரியைகளுக்கு ஏற்பாடு செய்த உறவினர்களை கடுமையாக எச்சரித்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றிலும் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையை பார்வையிட்ட நீதிவான், பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்தார்.