சங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்

ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 2013ஆம் ஆண்டு பித்தளை, இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் அடங்கிய கொள்கலனை திருடியுள்ளார் என கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பொலிஸ் கோவைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர், குண்டு தாக்குதலின் போது சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தெமட்டகொட – பேஸ்லைன் வீதியில் உள்ள மஹவில பார்க் என்ற இடத்தைச் சேர்ந்த மொஹம்மட் இப்ராஹிம் இன்சார் அஹமட் என தெரியவந்துள்ளது.

குறித்த வழக்கினை ஜனவரி மாதம் விசாரணைகளுக்காக எடுத்துக்கொண்ட போது குறித்த குண்டுதாரியும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்ததாகவும், இவர் 2013.05.30ம் திகதி 61 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.