கருணா குழு உறுப்பினர்கள் 3 பேர் கைது ! 11 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மர்மம்!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில், கருணா குழுவின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்திச் சென்று கொலை செய்து மயானமொன்றில் சடலத்தை புதைத்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலத்தை நாளை தோண்டி எடுத்து இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் , அவர் வீட்டுக்கு சென்று சேரவில்லை.

அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனது மர்மமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், கருணா குழுவின் உறுப்பினர்களான மகிளன் என்று அழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன், என்று அழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்று அழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்தமையினை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.