எந்நேரமும் கைது செய்யப்படலாம்? பதட்டத்தில் ஹிஸ்புல்லா

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டுத் தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே,

முஸ்லிம் மக்கள் இலங்கையில் சிறுபான்மையினரே உள்ளனர். எனினும் சர்வதேச ரீதியாக அவர்களே பெரும்பான்மையினர் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார். அத்துடன் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்த ரத்ன தேரை பார்க்க வந்த தேரர்கள் தொடர்பிலும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான இனவாத கருத்துக்கள் மூலம் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த ஹிஸ்புல்லா முயற்சித்துள்ளார்.

2007 ஆம் இலக்கத்தின் 56 பிரிவிலுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச கூட்டு சட்டத்திற்கமைய, இனங்களுக்கு இடையில் கோபத்தை ஏற்படுத்தும் கருத்தினையே அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த கருத்து முஸ்லிம் மக்கள் மனதில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் காணப்பட்டது. ஏதோ ஒரு வகையில் வன்முறையை ஏற்படுத்தும் வகையிலேயே அவர் கருத்து வெளியிட்டார்.

“நாங்கள் இவற்றினை கண்டுக்கொள்ள தேவையில்லை. நாங்கள் தான் உலகில் உள்ள பெரிய இனம். எங்களால் இதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எழுந்து வாங்கள்..” போன்ற ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்கள் மக்களை தூண்டிவிடும் வகையிலேயே காணப்பட்டது.

மிகவும் தெளிவாக இன மதங்களுக்கு இடையில் கோபம், வெறுப்புக்களை ஏற்படுத்தி, வன்முறையை தூண்டிவிடும் நடவடிக்கையினை ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டுள்ளார்.

எனவே உறுதியாக இந்த சட்டத்தின் கீழ் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலால் குழப்பமான நிலையில் ஹிஸ்புல்லா இருப்பதாக காத்தான்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன.