ஹிஸ்புல்லாவை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சஹரான் வளர்ந்த வரலாறு

அம்பாறை காத்தான்குடியில் சஹ்ரான் இருந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டி எழுப்பியதாக மட்டு.விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் காதல் எனும் பெயரால் தமிழ்பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவசரகால சட்டத்தினால் வதைத்தால் தான் வீதிக்கு இறங்கி போராடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் இந்து குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இன்று தேரரை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஆளுநர் மட்டுமன்றி சில சட்டத்தரணிகள், நீதவான்கள் போன்றோரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சிகள் இருப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.

ஆளுநரின் காரியாலயத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டபோது அவை பொலிஸ் உத்தியோகத்தருடையது என அதற்கு கதி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30வருடயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிள்ளைகளை கடத்திசென்று சஹரான் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் அவர்களை இணைப்பதாக தகவல் கிடத்ததாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது அவர்களின் முறைப்பாட்டினை ஏற்கவில்லை என்றும், இந்நிலையில் அவர்களை இவ்வாறான பிரச்சனைகளிற்கு தள்ளவேண்டாமென பொறுப்புள்ள அதிகாரிகளிற்கு மதகுரு என்றவகையில் கூறிக்கொள்ள விருப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும், சட்டத்தை பிரித்துவழங்கியதன் விளைவுதான் இது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளை சாதமாக பயன்படுத்திக்கொண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்வந்ததாகவும் , எனவே இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவசரகால, பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி யாரையும் கைதுசெய்யலாம் என்றும், எனினும் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்துபவர்களை கைதுசெய்யாது நியாயத்தை கதைப்பவர்களை கைதுசெய்வதை நாம் பார்த்துகொண்டிருக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் புதன் கிழமை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர், அரசாங்க அதிபர், கல்வி பணியாளர்கள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறியப்படுத்த உள்ளதாகவும், அதன் பின் அவர்கள் சரியான தீர்வை எடுக்காவிடின் ,தாம் வீதிக்கு இறங்கி போராடவேண்டிய நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.