கொழும்பு கோட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி; மூடப்பட்டன முக்கிய வீதிகள்!

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் கொழும்பு டெக்னிகல் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் ஆர்ப்பாட்டகாரர்கள் அப்பகுதியிலிருந்து தற்பொழுது புறகோட்டைக்கு நகர்ந்துள்ளதால் கோட்டைப் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஜே.வி.பி முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தால் கொழும்பில் அலுவலகங்களுக்கு சென்ற மக்கள் வீதிகள் பூட்டப்பட்டதால் திரும்ப முடியாத நிலையில் அவதியுறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் வரிச்சுமையாலும் விலை அதிகரிப்பாலும் மக்களை வதைத்துவருவதாக கூறும் மக்கள் விடுதலை முன்னணி அவ்வாறான ஒரு அரசாங்கம் மக்களுக்குத் தேவையில்லை என்றும் உடனடியாக பதவி விலகவேண்டுமென்றும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.