பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் வீடுகளில் சோதனையை தொடருங்கள்! மஹிந்த

தனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து எழுகின்ற பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் பள்ளிவாயல்கள், முஸ்லிம் வீடுகள், வியாபார நிலையங்கள் சோதனை இடப்பட வேண்டும். கட்டாயமாக முஸ்லிம்களை கைது செய்ய வேண்டி வரும்.

தற்பொழுது நாட்டில் அடிப்படைவாதம் குறித்து பேசப்படுவதில்லை. சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தேடப்படுவதும் இல்லை.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. தமது அரசியல் நடவடிக்கைக்காக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிப்படைவாத முஸ்லிம்களினதும், நடுநிலை முஸ்லிம்களினதும் வாக்குகள் அவசியமாகியுள்ளதாகவும், பயங்கரவாதத்தை இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்கட்ட நடவடிக்கைகள் எனும் தலைப்பில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் மஹிந்த உரையாற்றினார்.