வேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஒன்று விசமிகளால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மணியந்தோட்டம், உதயபுரம் கடற்கரை வீதியில் இன்று (17) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு அந்தப் பகுதியால் கடற்தொழிலுக்குச் சென்றவர்கள் மாதா சொரூபம் இருந்ததைக் கண்டுள்ளனர். அதனால் அதன் பின்னரே அது உடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மேலும் மாதா சொரூபம் அமைந்துள்ள இடத்தில் வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தூரத்திலிருந்து அவதானித்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.