பாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்! இளைஞர்களுக்கு ஓர் முன்மாதிரி

செங்கலடி மக்கள் வங்கி ATM இயந்திரத்தில் ( 14/06) வெள்ளிக்கிழமை மாலை (04.16 PM) பணம் எடுக்க சென்ற ஏறாவூரை சேர்ந்த சகோதரர் அஷாம் ATM அட்டையை உட்செலுத்த முயற்சிக்கையில்,

இயந்திர திரையில் உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற வாசகம் வர, குனிந்து பார்த்த போது குறித்த பணத்தொகையான 19600/ரூபா ஏற்கனவே வெளியேறியிருந்துள்ளது.

இப் பணம் தனக்கு முன்பாக பணம் எடுக்க வந்தவருடையதாகயிருக்கும் எனக் கருதி, தான் எடுக்கச்சென்ற பணத்தை ATM ஊடாக பெற்றுக்கொள்ளாமல், ATM இயந்திரத்தில் வெளியேறியிருந்த பணத்தை கையிலெடுத்துக்கொண்டு ஏறாவூர் பிரதேச மரண விசாரனை அதிகாரியான மீராசாஹிபு முஹம்மது நஸீர் என்பவரது வீட்டுக்கு சென்று ஒப்படைத்தார்.

யாருடைய பணம் என்பதை கண்டறிய திங்களன்று செங்கலடி மக்கள் வங்கிக்கு சென்று முகாமையாளரிடம் விடயத்தை தெரிவித்த பின்பே அறியக் கூடியதாகயிருக்கும் என சகோதரர் அஷாமிடம் கூறி மரண விசாரணை அதிகாரி பணத்தை பெற்றுக்கொண்டார்.

அவ்வாறே அப்பணத்தை செங்கலடி மக்கள் வங்கி முகாமையாளரிடம் ஒப்படைப்பதற்காக சகோதரர் அஷாமையும் அழைத்துக்கொண்டு இன்று காலை 11.00 மணியளவில் மரணவிசாரணை அதிகாரி சென்றார்.

வங்கி முகாமையாளர் திருமதி சுதாகரன் அவர்களை நேரடியாக சந்தித்து, விடயத்தை தெளிவுபடுத்திய போது, உடனடியாக வங்கி CCTV பதிவை பார்வையிட்டபோது குறித்த தினத்தில் சகோதரர் அஷாமுக்கு முன்னதாக சாம்பல், நீல நிற கோடுகளிட்ட ரீ சேட் அணிந்த ஒரு சகோதரரே ATM ஊடாக பணம் எடுக்க முயற்சிப்பது தெரியவந்தது.

இருந்தாலும் வங்கியின் ATM க்கான பதிவேட்டை பார்வையிட்டு உரிய நபரை கண்டுபிடிக்கலாம் என முகாமையாளர் திருமதி சுதாகரன் கூறியதால், ATM ஊடாக பெறப்பட்ட 19600/= ரூபாவையும் சகோதரர் அஷாம் மூலம் முகாமையாளரிடம் கையளித்தனர்.