சனிக்கிழமைகளில் மறக்காம இதை செய்தாலே போதும்… அப்புறம் பாருங்க உங்க முன்னேற்றத்தை..!

நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பார்கள். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனிபகவான் தருவார்.

பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மகாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு ஏற்படுத்தும் காலங்களாகும்.

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர் “சனி” தான். பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள். ஆனால் தன்னை யார் சிரத்தையோடு வழிபடுகிறார்களோ அவருக்கு அல்லது அவர்களுக்கு, கருணையை அள்ளித் தரும் வள்ளல் இவர்தான்.

ஜோதிட சஸ்திரப்படி சனிபகவான் ஆட்டிப்படைப்பார் என்ற கருத்தானது தவறானதாகும். ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொறுத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத்தரும்.

நமக்கிருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட, செல்வம் சேர, குடும்பத்தில் குதூகலம் நிரந்தரமாய் குடியிருக்க சில நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பலன்களை எதிர்பார்க்காமல், நம்பிக்கையுடன் சில விஷயங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதை நீங்களே உணர்வீர்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மறக்காமல், காலை குளித்து முடித்து, சாப்பிட அமர்வதற்கு முன்னால், காகத்திற்கு உங்கள் கையால் ஏதாவது உணவை வைத்து விட்டு, காகம் சாப்பிட்ட பின்பு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

தவறாமல் எல்லா சனிக்கிழமையும், பூஜை செய்து ஒரு எலுமிச்சை பழத்தை கண்ணாடி டம்ப்ளரில் வைத்து வந்தால் நம் வீடு மற்றும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மீதான கெட்ட சக்திகள் விட்டு விலகி செல்லும். இதே போன்று வாராவாரம் சனிக்கிழமையன்று எலுமிச்சை பழத்தை மாற்றி வைக்க வேண்டும்.

மறக்காமல் சனிக்கிழமையன்று மாலை நேரத்தில் சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் ஊற்றி எளதீபம் ஏற்றி வழிபட வேண்டும். மறக்காதீர்கள்… எள் தீபத்தை மாலை நேரத்தில் தான் ஏற்றி வழிபட வேண்டும். மாலையில் வேலை இருக்கிறது என்று காலையிலேயே ஏற்றி வழிபட்டால் முழு பலனும் கிடைக்காது.