யாழில் பிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் கடந்த 17ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்று பிறந்துடன், தாயும், சேயும் கடந்த 19ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவித்து நேற்று முன் தினம் மீண்டும் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.