ரிசாத் பதியூதீன் தொடர்பில் இன்று வெளியான அதிமுக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இன்று எழுத்து மூலமாக தகவல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரான் குழுவுக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் இடையில் நெருக்கிய தொடர்பு உள்ளதாக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் குற்றம் சாட்டப்பட்டது.

சுமார் 10 குற்றச்சாட்டுக்களை வைத்து ரிசாத் பதியூதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. எனினும் அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த முன்னர் தனது அமைச்சு பதவியை ரிசாத் பதியூதீன் ராஜினாமா செய்திருந்தார்.

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களில் பயங்கரவாதிகளான சஹ்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் பயணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்திருந்தார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஆஜராகி சாட்சியம் வழங்கி வருகிறார்.