யாழிலிருந்து சென்ற பேருந்தில் நிகழ்ந்த பாலியல் கொடுமை? பெண்களே உசார்!

யாழ்ப்பணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் யுவதி ஒருவர் நபர் ஒருவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு யாழிலிருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இடம்பெற்றுள்ளது.

காலை எட்டு முப்பதுக்கு யாழ் பேருந்து நிலையத்திலிருந்து கண்டி நோக்கி புறப்படும் பேருந்தில் முன் வரிசையிலிருந்து இரண்டாவதாக, மூன்று ஆசனங்கள் உள்ள பக்கத்தில் குறித்த நபர் ஜன்னலோரமாக இருந்துள்ளார்.

புறப்படுவதற்கு முன்னதாக பேருந்தில் ஏறிய மேற்படி யுவதி, ஆசனங்கள் இன்மையால் குறித்த நபருக்கு அருகில் அமர்ந்துள்ளார்.

பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது இயக்கச்சி பகுதியில் திடீரென்று ஆசனத்தைவிட்டு எழுந்த குறித்த யுவதி, முன்னால் சென்று சற்று நேரம் நின்றபடி பயணித்துள்ளார்.

இதன்போது அருகில் நின்ற சிறுமியிடம் குறித்த நபரையும் பின்னர் அவருக்கு அருகில் இருந்த வயோதிபரையும் சுட்டிக்காட்டி ஏதோ விசாரித்துள்ளார். குறித்த சிறுமி இல்லை என்பதுபோல் தலை அசைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து குறித்த யுவதி தனது கையில் வைத்திருந்த குடையால் குறித்த நபரின் தலையில் சரமாரியாக தாக்கத்தொடங்கினார்.

இதன்போது பேருந்தில் பயணித்த சக பயணிகள் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். எவ்வாறாயினும் குறித்த யுவதியிடம் குறித்த நபர் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்து.

இதேவேளை குறித்த நபர் கிளிநொச்சி நகர் ஆரம்பிக்கும் பகுதியில் இறங்கியதுடன், யுவதி கிளிநொச்சி முடியும் இடத்தில் இறங்கிச் சென்றார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரிடம் பேருந்து ஓட்டுநரோ, நடத்துனரோ அல்லது அதில் பயணித்த சக பயணிகளோ இதுகுறித்து தட்டிக் கேட்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த யுவதியின் செயல் அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியானது என சிலர் பேசிக்கொண்டமையினையும் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக்களில் அண்மைக்காலமாக ஆண்களின் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளமையினால் பெண்கள் இதுகுறித்து உசார் நிலையில் இருக்கவேண்டுமென பெண்கள் அமைப்புக்கள் எச்சரித்துவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.