பெரும் சோகத்தை ஏற்படுத்திய பெண்; ஒரு குடும்பமே சிதைந்து போனது!

இலங்கையின் தெற்கே கிரிந்த கடலில் குளிக்கச் சென்று மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹட்டன் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹட்டன் சாக்கு விடுதி வீதியைச் சேர்ந்தவரும் நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரிந்துவந்தவருமான அசினி விஜேசூரிய என்பவரே பலியானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 23ஆம் நாள் மேற்படி கடலில் குளித்த அவரது கணவன் மற்றும் இரண்டு மகள்மார் அன்றைய தினமே பலியாகியிருந்த நிலையில் அசினி மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக தெபரவவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல் தீவிர நிலையின் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்த்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

எவ்வாறாயினும் அங்கு மேற்கொள்ளப்பட்டுவந்த தொடர் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் பலியானதாக கூறப்படுகிறது.

அசினி சம்பத் வங்கியில் பணிபுரிந்துவந்த நிலையில் வங்கி ஊழியர்களுடன், அசினி குடும்பமும் யால தேசிய வனத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளது. பின்னர் கிரிந்த பகுதிக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் காலை ஏழு மணியளவில் கடலில் குளித்துள்ளனர்.

இதன்போது பெரிய அலையொன்று அவர்களை உள்ளிழுத்துச் சென்றதாகவும் இதனால் அவர்கள் நீரில் மூழ்கி பலியானதாகவும் கூறப்படுகிறது.

குறித்த கடற் பகுதி பாரிய பாறைகளைக் கொண்டுள்ளதுடன் கடும் அலைகளையும் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பலியானவர்கள் 42 வயதுடைய ருவான் விஜேசூரிய, எட்டு வயதுடைய சாகலா விஜேசூரிய, நான்கரை வயதுடைய நதிஷா விஜேசூரிய என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தென்னிலங்கைக் கடல்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களை கடற்கரைகளுக்குச் செல்லவேண்டாமென்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.