17 முஸ்லிம் ஆசிரியர்களால் தமிழ் வித்தியாலயத்திற்கு ஏற்பட்ட நிலை!

அவிசாவளை புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயங்களில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற 17 ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்கள் இன்னும் இரண்டு வாரங்களில் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவிகபட்டுள்ளது.

இதனை மாகாண ஆளுநர் மற்றும் கல்விப் பணிப்பாளரும் தம்மிடம் தெரிவித்ததாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, பாடசாலைக்கு பர்தாவுடன் வந்த முஸ்லிம் ஆசிரியைகள், சோதனைக்கு ஒத்துழைக்காததையடுத்து அங்கு சர்ச்சையேற்பட்டதையடுத்து, அப்போதைய மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் உத்தரவிற்கமைய 17 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம் பெற்று சென்றனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக பாடசாலையின் அதிபர் செபஸ்டியன் இது தொடர்பாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதை தொடர்ந்து அவர் இது தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசாமில் மற்றும் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

குறித்த பாடசாலையின் ஆசிரியர்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்வதாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசாமில் மற்றும் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.

கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர்களின் நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த தேர்வில் தெரிவு செய்யப்படுகின்றவர்களை உடனடியாக குறித்த பாடசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்கனவே குறித்த பாடசாலையில் கல்வி கற்பித்த ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் தற்காலிகமாக இணைந்து கொண்டு சேவையாற்ற விரும்புவார்களானால் அவர்களையும் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற சம்பவத்தின் பின்பு ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக அவிசாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றிற்றில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆசிரியர்கள் திடீரென இடமாற்றம் செய்ததை தொடர்ந்து குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டனர்.

அது மாத்திரமன்றி அன்றைய ஆளுநரும் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் குறித்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்து ஒரு பிழையான முன்னுதாரணத்தை ஆளுநர் மேற்கொண்டுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.

இதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி பயிலுகின்ற பெருந்தோட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பிழையான தீர்மானங்களால் பாதிக்கப்படுவது மாணவர்களே அன்றி ஆசிரியர்கள் அல்ல.மேலும் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டே குறித்த ஆசிரியர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்பட்டார்கள். எனவே அவர்களை எந்தவிதமான திட்டமிடலும் இன்றி இடமாற்றம் செய்த காரணத்தால் அந்த பாடசாலைக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.