இன்றிலிருந்து இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத்தளமாகிறது பலாலி

பலாலி விமானத்தளம் இதுவரை விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில் இனிமேல் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு மையமாக விளங்கும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பலாலி விமானத்தளம் இலங்கையின் போருக்கு முன்னரும் சர்வதேச விமானத் தளமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச வானூர்தித் தளமாக மாற்றும் அரச வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் பலாலி விமான நிலைய மையத்தினுள் வரும் அராலி-தெல்லிப்பழை-வல்லை வீதியின் ஒருபகுதியை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து சீரமைத்துக்கொடுத்தால் அதனை தம்மால் காப்பற் வீதியாக மாற்றி பொதுமக்களின் போக்குவரத்துக்கு நன்மைபயக்கத்தக்கவகையில் மாற்றியமைக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கூறிய கருத்துக்களின் சாரங்களாக,

இலங்கையில் இதுவரை இரண்டு சர்வதேச விமான நிலையங்களே இருக்கின்றன. இன்றிலிருந்து மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி வானூர்தித் தளமும் விளங்கவிருக்கிறது.

தென்னாசிய நாடுகளின் அடிப்படையில் தரமான விமான சேவையூடாக வருமானம் பெறுவதில் இலங்கை தொடர்ந்தும் முன்னணியில் இருக்கிறது.

நாட்டு மக்களின் போக்குவரஹ்துக்காக 2000 பேருந்துகளை கொள்வனவு செய்யவிருக்கிறோம். இவற்றில் விசேடமாக யாழ்ப்பாணத்துக்கு நான்கு பேருந்துக்கள் கொடுப்போம்.

இலங்கையின் புகையிரத சேவைக்கு 12 இயந்திரங்கள் இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

இந்த விமானத் தளத்திலிருந்து இந்தியாவுக்கு பயணிப்பதற்கு இங்கு வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.