மாவீரர் சாட்சியாக நடந்த நந்தினி – ஜோதிபாசு திருமணம்! வெளியான வீடியோ

மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில், நந்தினிக்கும் குணா ஜோதிபாஸுக்கும் இன்று திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் நடத்திவரும் நந்தினியின் திருமணம், குலதெய்வக் கோயிலில் எளிமையாக நடைபெற்றது.

மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும், டாஸ்மாக் கடைகளை மூடுதல் உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் தந்தையின் ஆதரவோடு வாசகங்கள் நிறைந்த பதாகையோடு போராட்டத்தில் இறங்கிவிடுவார்.

பெரும் கூட்டங்களைக் கூட்டுவதோ, வேறு சில அமைப்புகளோடு இணைவதோ இல்லாமல், தன்னுடைய போராட்டங்களை முன்னெடுப்பார்.

இந்நிலையில், ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்கும் குணா ஜோதிபாஸுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, கடந்த 27-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328-ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், மீண்டும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றம், ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று மாலை சிறையில் இருந்து நந்தினியும் அவரது தந்தையும் வெளியே வந்தனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில் நந்தினிக்கும், குணா ஜோதிபாஸுக்கும் இன்று திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. நண்பர்கள் பலரும் நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.