தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானின் மனைவி வெளியிட்ட தகவல்!

ஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் காதியாவிடம் மேற்கொண்ட விசாரணைகள் குறித்து பொலிஸார் நீதிமன்றில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் நேற்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இதை குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல் காதர் காதியா என்பவரிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து மீரிகம மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களிலுள்ள வயல் நிலங்களில் வீசியதாக தெரிவிக்கப்படும் தொலைபேசிகள் மூன்றின் பாகங்களை கைப்பற்றி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஸஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவர் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் கைது செய்யப்பட்டு CID யினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் CID யினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் ஷங்ரி லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த மற்றைய நபரான மொஹம்மட் இப்ராஹிம் மொஹம்மட் இல்ஹாமின் DNA அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்த CID யினர், அது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

உரிய விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.