இறந்ததாக கூறி தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் உண்மையிலேயே இறந்துபோன பரிதாபம்!

இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஆர்.எஸ். கோபால், நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.

பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வந்த கோபால், படத்தில் இறந்து போவது போன்ற காட்சி ஒன்றில் நடித்தார்.

சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் , படத்திற்காக ஒட்டப்பட்ட தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்தார்.

அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடைவைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாக கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர்.

அங்கு வாசலில் கெத்தாக அமர்ந்திருந்த கோபால், தன்னுடைய புதிய படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்று நண்பர்களிடம் விளக்கம் அளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.

ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.

சினிமாவிற்காக விளையாட்டாக போஸ்டர் ஒட்டியவர் நிஜத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.