சமூக வலைதளத்தில் தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்; நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத தண்டனை!

விஷம் குடித்து தற்கொலை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளயிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

காரைக்குடியை சேர்ந்த கார்த்திகா என்ற பெண் கடந்த மாதம் பணியாற்றும் இடத்தில் பாலியல் தொந்தரவு காரணமாக கணவருடன் தகராறு ஏற்பட்டு தாம் தற்கொலை செய்வதாக கூறி விஷம் அருந்துவது போன்ற காணொளி காட்சியை வெளியிட்டிருந்தார்.

இதனைக் கண்ட காவல் துறை எஸ்.ஐ. தினேஷ் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் கார்த்திகா சோப் ஆயில் குடித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்ததையடுத்து குறித்த காணொளி காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் கவனத்தக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் கார்த்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி , அரசு மருத்துவமனையில் ஒருமாத காலத்திற்கு தினமும் சென்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளார்.

குறித்த தீர்ப்புக்கு பொதுமக்கள் வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.