5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் தாம் மேற்கொள்ளவில்லையென யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் 5ஜி அலைவரிசை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ் மாநகர சபையினால் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) தொடர்பான ஒப்பந்தம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக முறைப்படி கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் 5ஜியையும் ஸ்மார்ட் லாம் போல் திட்டத்தையும் (SMART LAMP POLE) தொடர்புபடுத்தி நன்கு படித்த வல்லுனர்களும் மக்களுடன் இணைந்து தவறான புரிதலுடனான கருத்துக்களையே வெளியிடுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் அதனை தங்களிடம் நேரடியாக கலந்துரையாட முடியும் எனவும் யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.