வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்

துபாயில் இருந்து ஒரு மாத கால விடுமுறையில் திரும்பி இருந்த நபர் வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி, பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய தவராசா தற்பரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ஆயித்தியமலை, ஆறாம்கட்டையிலுள்ள தனது வயலுக்குச் சென்றுவிட்டு மாலை மோட்டார் சைக்கிளில் வவுணதீவு வீதியினூடாக தனது வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டுள்ளார்.

அவ்வேளை எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் சடுதியாகத் திரும்பியதால் அதில் மோதுண்டு பின்னர் வீதி அருகில் இருந்த கொங்கிறீட் கட்டு ஒன்றுடன் மோதுண்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த மாதம் 19ஆம் திகதியே துபாயிலிருந்து ஒரு மாத விடுமுறையில் நாடு திரும்பியிருந்த நிலையில், மீண்டும் அவர் திங்கட்கிழமை துபாய் செல்லவிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்