யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு நேரடி விமான சேவை!

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 300 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது.

எதிர்வரும், ஒக்டோபர் மாதம் முதல் பலாலி விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பயணித்து கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.