நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவர் பலி: மற்றொருவரை தேடும் பணியில் இராணுவத்தினர்

அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழைகாரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றின் ஊடாக அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற வேளையிலேயே மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது, மாணவிகள் இருவரும் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷமி வயது 12 எனும் மாணவி உயிரிழந்துள்ளதோடு, மதியழகன் சங்கிதா வயது 12 எனும் மாணவியை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.