லாஸ்லியா பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென “லாஸ்லியா ஆர்மி” பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன.

லாஸ்லியா வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி பிறந்தார். கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கு லாஸ்லியாவின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை அன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதும் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், ஓட்டுநராக பணி செய்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் லொஸ்லியாவின் தந்தை தொழில் வாய்ப்பை தேடி கனடா சென்றுள்ளார். அதன் பின்னர் தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர்.

இதன்போது லொஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

உயர்தர பரீட்சையை எழுதிய லொஸ்லியா, பெறுபேறு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஊடக பிரவேசத்திற்கான சந்தர்ப்பம் கிடைத்த தருணத்திலேயே, உயர்தரத்தில் சித்தியும் பெற்ற லாஸ்லியா பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகமா? ஊடக பயணமா? என்ற கேள்வியில் , இறுதியில் ஊடக பயணத்தை தொடர்வது என்ற முடிவை எட்டியுள்ளார்.

அதன்படி குறித்த தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் ஊடாக, பிரபலமடைந்த அவர், அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.

லொஸ்லியாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பில் குறித்த தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் கூறியது,

”இந்த நிகழ்ச்சிக்கு போவது குறித்து அவங்க கடைசி வரைக்கும் யாருக்கும் சொல்லவேயில்லை. சில வேளைகளில் அது விதிமுறையாகவும் இருக்கலாம். எங்களோட மிக நெருக்கமாக பழகியும் கூட இந்த விஷயத்தை சொல்லவில்லை. அது நல்ல விஷயம். அந்த நிறுவத்தினால் வழங்கப்பட்ட விதிமுறைகள அவங்க மதித்து இருக்காங்க. போனதுக்கு பிறகு தான் தெரியும் இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் இருக்கானு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். வியப்படைந்தோம் என கூறியுள்ளார்.

விஜய் டிவில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் பணியாற்றிய இலங்கை பெண் ஒருவரின் உதவியுடனேயே, லொஸ்லியா தமிழக ஊடகத்துறைக்குள் சென்றதாகவும்,

அவரிடம் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் ஊடாக, அவர் நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்;.

இந்த நிலையில், லொஸ்லியா தொடர்பில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் ,

“நண்பர்கள் மாத்திரம் ரசித்துக் கொண்டிருந்த லொஸ்லியாவை, இன்று உலகமே ரசித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அத பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களோட இருந்த லொஸ்லியாவையே நாங்க இப்போ டி.வியில் பார்க்கிறோம். லாஸ்லியா இப்போ இருக்க இடத்த நினைச்சு அவங்க அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. ஆனா அதே அளவு அவள மிஸ் பண்ணுறாங்க என லாஸ்லியாவின் தோழி தெரிவித்தார் .

சண்டைகள் அதிகம் நிறைந்த அந்த நிகழ்ச்சியில், எந்த வித வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும் லொஸ்லியா ரசிகர்களை ஈர்த்துள்ளதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அவருக்கு அதிக ரசிகர்கள் இருப்பதை தெரிந்த கொண்ட சேனல் அவரை அதிகம் பேச வைத்தும் அழகு பார்த்து வருகிறது.

கடந்த வார நிகழ்ச்சியில் அவர் சொன்ன `மைனம்மா` கதைக்கு பிறகு அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம். இதற்கு முன்பு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இம்மாதிரியான புகழை பெற்றவர் நடிகை ஓவியா.

எத்தனை முறை நாமினேட் செய்யப்பட்டாலும், ரசிகர்களின் வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்தவர் ஓவியா. இதுவரை லொஸ்லியா நாமினேட் செய்யப்படவில்லை என்றாலும், ஏதோ ஒரு தருணத்தில் அவர் நாமினேட் செய்யப்பட்டாலும் அவருக்கு விழும் வாக்குகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கும் என்பதை நாம் சமூக ஊடகத்தின் வழியாக பார்க்க முடியும்.

இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் லொஸ்லியா இந்த சீஸனின் இறுதிவரை போகக் கூடியவர் என்பதும் பலரின் கருத்தாகவே உள்ளது.