கருணா குழுவின் படுகொலையில் வெளியான வீடியோ ஆதாரம்

விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டதனால் கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் தனது குடும்பத்தை நடாத்துவதாக முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

எனினும் எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த 2008 ஆண்டு கொக்கட்டிசோலை பகுதியில் வைத்து தனது மனைவியின் தம்பி காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாகவும், நானும் எனது மாமாவும் கொக்கட்டிசோலைக்கு வருகின்ற போது எங்களை பின்தொடர்ந்து ஆயுததாரிகள் வந்ததாகவும், இதனால் அச்சமடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு அவரை தேடுவதை நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எனது மச்சானை பொலிஸ் உத்தியோகத்தராக, நான் புலனாய்வு செய்து தேடுவதாக நினைத்து விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி சேவையில் இருந்து தம்மை நிறுத்தி விட்டார்கள் என்றும், தனக்கு மூன்று பிள்ளைகள் உள்ள அவர்கள் குறிப்பிடுவது போன்று எவ்விதமான குற்றங்களும் தாம் செய்யவில்லை என்றும், தனது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை பொலிஸ் மா அதிபர் ம்ற்றும் பொலிஸ் சேவை ஆணைக்குழுவினர் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரமநாதன் அனுராஜ் கோரியுள்ளார்.

எனக்கு இந்த விடயம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வொன்றை பெற்றுத்தருவதோடு , இந்த வழக்கை விரைவாக முடித்து உரிய தீர்வை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் 10 வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்து கண்டி மாவட்டத்திலும் 2 வருடங்கள் கடமை செய்து வந்த வேளை தனது மைத்துனர் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாகவும், அவரை தேடுவதற்காக நான் எடுத்த முயற்சியின் காரணமாகவே தான் தன்மீது பொய்குற்றச்சாட்டை முன்வைத்து வேலையை விட்டு நீக்கி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலைபொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்றையதினம் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டமாவடி களுவாஞ்சிகுடி கல்லடி போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.