ஆசை அதிகமானதால் 92,000 ரூபாயை இழந்த யாழ்ப்பாண அதிபர்! நீங்களும் அவதானம்..

தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது.

இப்படியாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து 92,000 ரூபாயை சுருட்டியுள்ளனர் தொலைபேசியில் ஏமாற்றும் திருடர்கள்.

அப்படி வலையில் சிக்கி ஏமாந்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர்.

கரணவாய் பகுதியை சேர்ந்த இந்த அதிபரிடம் 8 கோடி ரூபா அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக கூறி, 92,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கடந்த வியாழக்கிழமை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் அவருக்கு 8 கோடி ரூபா கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மெய்மறந்த அதிபரை, உடனடியாக தமக்கு 92,000 ரூபாய் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி நம்ப வைத்தனர் மோசடிக்காரர்கள்.

இதையடுத்து நெல்லியடியிலுள்ள கொமர்ஷல் வங்கி கிளையில் 92,000 ரூபாய் பணத்தை செலுத்தினார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், மேலும் இரண்டரை இலட்சம் ரூபாவை செலுத்தும்படி கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அதிபர், மீளவும் அந்த இலக்கத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அதிபர், நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.