தலைமறைவான காதலர்கள்: காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை!

காதலித்தவரின் தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய காதலியின் தந்தையை காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதியரின் மகன் பெரியசாமி என்பவர், அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி மகள் பவுலியா என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் கொளஞ்சி தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்திருந்த நிலையில், காதலர்கள் இருவரும் சில வாரங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினரிடையே பிரச்னை இருந்து வந்தது.

இதுகுறித்து கொளஞ்சி, பெரியசாமியின் தாய் செல்வியிடம் சென்று, தனது மகளை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.

இருப்பினும் அவர்களை செல்வியால் அழைத்து வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி இரு தினங்களுக்கு முன், ஊரின் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து செல்வியை, கொளஞ்சியை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும், இதைக் கண்ட கிராம மக்கள் விருத்தாசலம் போலீஸாருக்குத் தகவல் அளித்த நிலையில், போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, செல்வி மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில், பெண்ணின் தந்தை கொளஞ்சியை கைது செய்த போலீஸார், அவரை நிலைய ஜாமீனிலேயே விடுவித்தனர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீதை தொடர்புகொண்ட போது, அதுகுறித்து பேச மறுத்துவிட்டார்.

பின்னர் வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கலிமூர்த்தியிடம் பேசியபோது, சம்பவம் தொடர்பாக வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளோம். இருவரும் ஒரே சமூகத்தினர்.

ஆத்திரத்தில் தவறு நடந்துவிட்டதாக கொளஞ்சி கூறினார். எனவே அவரது வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவித்தோம்.

தலைமைறைவாக இருந்த ஜோடியான செல்வி-பெரியசாமி குடும்பத்தினரோடு இணைந்துவிட்டதால், இருகுடும்பத்தினரும் சமாதானமாகி சென்றுவிட்டனர்.