இலங்கை பெண்களில் 40 சதவீதமானோர் அதிக உடற்பருமனைக் கொண்டதாக இருப்பதாக புதிய ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவலொன்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு பிரிவின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்படி உடற் பருமனை கொண்டோர் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளதாகவும், அவர்கள் பலர் சுகாதார பிரச்சினைகளை எதிர்க்கொண்டிருப்பதாகவும் வைத்தியர் திருமதி ரேணுகா ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
அத்துடன் இவ்வாறான தாய்மார்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் நிலை பெருமளவில் காணப்படுவதாகவும் இது மிக மோசமான நிலை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களிற்கு கர்ப்ப காலப்பகுதியில் இவ்வாறான நிலை காணப்படுமாயின் எதிர்காலத்தில் அது அவர்களின் பிள்ளைகளையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக இரத்த அழுத்தம் உள்ளிட்ட சில பாதிப்புக்களும் ஏற்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம அளவிலான உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் அவர்கள் உடல் பருமனை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு பிரிவின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி ரேணுகா ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.






