யாழில் இளம் பெண் கொடூரமாகக் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளதுடன் கழுத்துப் பகுதி துணியொன்றினால் இறுகக் கட்டப்பட்டுள்ளது.

தம்பசிட்டி, கதிரவேற்பிள்ளை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெகநாதகுரு கிருபாலினி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி காணாமல்போய்விட்டார் என்று அவரின் கணவர் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும், அதன்பின்னர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில் கிணறு ஒன்றில் காணாமல்போன பெண் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று நண்பகல் குறித்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தைப் பொலிஸார் மீட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

“குறித்த இளம் குடும்பப் பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளது. கழுத்துப் பகுதி துணியொன்றினால் இறுகக் கட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை” என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.