கிளிநொச்சியில் இரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் சடலங்களாக மீட்பு! வெளிவந்துள்ள புதிய தகவல்

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அயல் வீட்டுக்காரரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், குறித்த வீட்டாருடன் தனக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அத்துடன் தன்னை தாக்கியமையால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் மகனை தாக்கியதுடன், இதனை கண்டதால் தாயாரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவம் இடம்பெற்ற வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சோதனை மேற்கொண்ட போது இறந்த மகனின் கைத்தொலைபேசியும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கம்பியும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் நாளையதினம் சந்தேகநபரையும், சான்று பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.