சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மூவர் அம்பாறையில் கைது

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் காசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர்கள் மூவரும் அம்பாறையில் இன்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லதே இப்ராஹிம் அமைப்பை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், பொலன்னறுவை, மாவனெல்ல மற்றும் வரக்காபொல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புடைய 116 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.