ஈழத்தில் ஒருவேளை உணவு இல்லாத தமிழ்க்கிராமம்: கதையல்ல இது நெஞ்சை உருக்கும் நிஜம்

வவுனியா மாவட்டத்தில் ஒருவேளை உணவுகூட இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் சோகமான கதை பற்றிய பதிவே இது.

வவுனியா – வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணாட்டி, பரமனாலங்குளம், கணேசபுரம் ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நூற்று எழுபத்தைந்து தமிழ்க் குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கு வழியின்றிப் பெரும் அவலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தத் தகவலை பங்குத் தந்தை அன்ரனி சோசை வெளியிட்டிருக்கின்றார்.

குறித்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர வருமானமின்றி ஒருவேளை உணவுக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே இந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவியளிக்குமாறு அருட்தந்தை அன்ரனி சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க் காலத்தில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து தற்பொழுது மீள்குடியேறிய இந்த மக்களுக்கு இலங்கை அரசாங்கம் வீடுகளை மாத்திரமே நிர்மானித்துக் கொடுத்துள்ளது.

ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை. வவுனியாவில் உள்ள சிவில் அமைப்புகளும் இந்த மக்களைக் கைவிட்டுள்ளதாகவும் அருட்தந்தை அன்ரனி சோசை தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் யானை, கரடி போன்ற காட்டு விலங்குகளுடன் தினமும் போராடி வருவதுடன் காட்டு விலங்குகளால் தினமும் உயிர் அச்சுறுத்துதலுக்கும் முகம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.