வௌவால்களின் கழிவை எடுக்க குகைக்குச் சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட நிலை!

வௌவால்களின் கழிவுகளை எடுக்க முற்பட்ட இளைஞன் இரண்டு பாறைகளுக்கிடையில் சிக்கி மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது கம்போடியாவின் நாம்பென் நகரம். இங்கு வௌவால்களின் கழிவு உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வரும் சம்போரா என்ற இளைஞர் வௌவால்களின் கழிவை சேகரிப்பதற்காக அங்குள்ள குகைப் பகுதிக்குச் சென்றார்.

இந்நிலையில் இரு பாறைகளுக்கு இடையே உள்ள சிறு இடைவெளியில், வௌவால்களின் கழிவுகள் இருந்துள்ளன. அதை எடுப்பதற்காக சிரமத்தைப் பொருட்படுத்தாமல் அவர் அந்த பாறை இடுக்கில் சென்றுள்ளார்.

பின்னர் அவரால் திரும்பி வெளியே வரமுடியவில்லை. அதனால் 3 நாட்களாக அந்தப் பாறை இடுக்கிலேயே அவர் உயிரைக் கையில் பிடித்துவைத்து இருந்துள்ளார்.

இதையடுத்து வௌவால்களின் கழிவை தேடிச்சென்ற சம்போராவை காணவில்லை என அவரது உறவினர்கள் அப்பகுதிக்கு வந்த போது, அவர் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சம்போராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.