உயிரிழந்த தந்தையின் கையால் தாலியை தொட்டு திருமணம் செய்த மகன்.. கண்கலங்க வைத்த தருணம்..!

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உயிரிழந்த தந்தையின் கையால் தாலி எடுத்துக்கொண்டு திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி(50). இவரது மகன் அலெக்சாண்டர்(29). இவருக்கும் உடன் வேலை செய்யும் மயிலம் அருகிலுள்ள கொணமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகள் ஜெகதீஸ்வரிக்கும்(24) அடுத்த மாதம் இரண்டாம் திகதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்படிருந்தது.

திருமணத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து இருவீட்டாரும் உறவினர்களுக்கு வழங்கி வந்த நிலையில். அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர்கள் மிகுந்த மன வேதனையில் ஆழ்ந்தனர்.

பெற்றோரின் முன்னிலையில் தான் திருமணம் நடக்க வேண்டும் என நினைத்த அலெக்சாண்டர் இது குறித்து பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்தார்.

பெண் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து ஜெகதீஸ்வரியை சிங்கனூர் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு உயிரிழந்த தெய்வணிக்கு புதிய ஆடைகள் உடுத்தி கட்டிலில் அமர வைத்தனர் தெய்வமணி கையால் தொட்ட மாங்கல்யத்தை எடுத்து அலெக்சாண்டர் ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு உறவினர்கள் மத்தியில் நெகிழ்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த தந்தையின் முன் மகன் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பார்ப்பவகளை கண்கலங்க வைத்துள்ளது.