ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! நான் தயார் என நாமல் அறிவிப்பு..?

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தாம் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க பிராஜாவுரிமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

“பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவரது ஆவணங்கள் தொடர்பாக பிரச்சினை என்றால், தேவைப்பட்டால் அதனை முன்வைப்போம். நீங்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்று கவலைப்படுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பதிவிற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தின் ஊடாக அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தமைக்கான ஆவணத்தினை கோத்தபாய ராஜபக்ச பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.