மன்னாரில் இளம் பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை! பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்

பொலிஸ் அதிகாரியொருவரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இளம்பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்

தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் இரவு நேரங்களில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் கூறி தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரியப் பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளார்.

தலைமன்னார் கிராமப்பகுதியில் வசிக்கும் எனது கணவர் ஒருநாள் நள்ளிரவு அவசர முச்சக்கர வண்டி சவாரிக்குச் சென்றபோது வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வீட்டிலே விட்டுச் சென்று விட்டார்.

இந்த நிலையில் உடனடியாக எனது தம்பியிடம் குறித்த ஆவணங்களை கொடுத்து அனுப்பினேன். சற்று நேரம் கழித்து எனது தம்பி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது.

என்னையும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். பொலிஸ் நிலையம் சென்ற போது தம்பி மாடு திருட முயன்றதால் கைது செய்ததாகவும் உன் தம்பியை விட வேண்டும் என்றால் நான் அழைக்கும் இடத்திற்குத் தனியாக வர வேண்டும் என பொலிஸ் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.

அதனால் கோபம் அடைந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவே வெளியே வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி அப் பெண்ணின் கையடக்க தொலைப்பேசிக்கு அழைப்பு மேற்கொண்டு தன்னுடைய நிபந்தனைக்கு அடிபணியுமாறு கோரியுள்ளார்.

குறித்த பெண் தனது கணவனின் அறிவுரையின் படி குறித்த பொலிஸ் அதிகாரியின் உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.

பின்னர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த உரையாடல்களை ஒப்படைத்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் மாற்றம் செய்வதாக வாக்குறுதியளித்தார்.

ஆனால் அவர் இடமாற்றம் வழங்கப்படாமல் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார்.

பொலிஸ் அதிகாரியின் அத்துமீறிய நடவடிக்கையை வெளிக்கொண்டு வந்ததால் இரவு நேரங்களில் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகச் செயற்படுவதாகவும் பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் பெண் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதியைப் பெற்றுத் தந்து எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.