இளைஞனுடன் கூடா நட்பால் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

தமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவரே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், கடந்த மாதம் 14-ஆம் திகதி சாக்குமூட்டை தீயில் எரிந்துகொண்டிருந்தது.

அப்போது அதில் துர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து பொலிசாருக்கு தகவ்ல தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் சாக்குமூட்டையை அணைத்து சோதனையிட்ட போது, அதில், ஒரு பெண் பிணம் முழுவதுமாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதனால் இது குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் எந்த துப்பும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் கரூர் மாவட்டம் தான் தோன்றிமலை பூங்காநகரை சேர்ந்த சிவசங்கரன்(47) என்பவர், கடந்த மாதம் 9-ஆம் திகதி தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் தனது மனைவி சூரியகுமாரியை (34) காணவில்லை என்று புகார் அளித்தார்.

அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிவசங்கரனும் மனைவியை தேடி அலைந்தார்.

பல்வேறு இடங்களில் பொலிசார் தேடியும் சூரியகுமாரி குறித்து அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சிவசங்கரனின் நடவடிக்கையில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் துப்பு கிடைக்கலாம் என்று பொலிசார் அவரிடம் செல்போனை தரும்படி கேட்டனர்.

ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக கூறியதால், இது பொலிசாருக்கு அவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதன் பின் அவருடைய செல்போன் கடைசியாக எங்கு பயன்படுத்தப்பட்டது என்று சைபர் கிரைம் பொலிசார் மூலம், தான்தோன்றிமலை பொலிசார் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மாதம் 8-ஆம் திகதி அது கொடைரோடு அருகே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் கொடைரோடு பொலிசாரை தொடர்புகொண்ட தான் தோன்றிமலை பொலிசார் சிவசங்கரனின் செல்போன் டவர் காட்டிய இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததா? என்று விசாரிக்க அப்போது சாக்குமூட்டையில், எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை கைப்பற்றிய விவரத்தை அம்மையநாயக்கனூர் பொலிசார் கூறினர்.

இதையடுத்து சிவசங்கரை தான்தோன்றிமலை பொலிசார், நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் தான் கொலை செய்து மனைவியை சாக்குமூட்டையில் வைத்து வீசிச் சென்றது தெரியவந்தது.

அவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்தது அவரை கண்டித்தேன். ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை.

அத்துடன் ஒரு வாலிபருடன் இணைந்து டிக்-டாக் வீடியோவும் வெளியிட்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 7-ஆம் திகதி இரவு வீட்டுக்கு சென்ற நான், படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன்.

பின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி படுக்கையறையில் வைத்துவிட்டு தூங்கினேன். பின்னர் அடுத்த நாள் காரில் அந்த சாக்குமூட்டை போட்டு கொடைரோடு அருகே, ரெயில்வே நகர் பகுதிக்கு வந்தேன்.

அங்குள்ள காலியிடத்தில் அந்த மூட்டையை வீசிச்சென்றேன். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு தான் தோன்றிமலைக்கு திரும்பிவிட்டேன்.

மேலும் என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 9-ஆம் திகதி சூரியகுமாரியை காணவில்லை என்று புகார் அளித்தேன். ஆனால் நான் கொலை செய்ததை பொலிசார் எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். அதனால் நான் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.