நெடுங்கேணியில் இளம்பெண்ணொருவரை கடத்திய கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் தொடர்புபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா வடக்கு காஞ்சிரமோட்டை பகுதியை சேர்ந்த யுவதியே கடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு காஞ்சிரமோட்டையிலிருந்து 18 வயது யுவதியும், வாலிபரும் வீட்டுக்கு தெரியாமல் தப்பியோடி, நேற்றிரவு மருதோடை பகுதிக்கு சென்றனர். இன்று அதிகாலை 4 மணியளவில் நெடுங்கேணி ஆட்டோ தரிப்பிடத்திலுள்ள ஆட்டோ ஒன்றை அழைத்து, புளியங்குளம் சந்திவரை சென்றுள்ளனர்.
அவர்கள் தப்பிச் செல்லும் தகவலை யுவதியின் பெற்றோர் புளியங்குளம் பொலிசாருக்கு அறிவித்தனர். இதையடுத்து, வீதியை சோதனையிட்ட பொலிசார் ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர்.
இதேவேளை, இந்த முச்சக்கர வண்டியில் வரும் காதலர்களை அழைத்து செல்ல வாகனமொன்றில் வந்து, பிரதான வீதியில் காத்திருந்த, காதலனின் நண்பர்கள் 9 பேரையும் பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.
காதல் ஜோடி, முச்சக்கர வண்டி சாரதி, வாகனத்தில் காத்திருந்த நண்பர்கள் என 12 பேர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.