யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினைத் தீர்வுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் குடிநீர்த் திட்டப் பணி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண குடிநீர் திட்ட பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கடந்த 2018 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைய வேண்டிய இந்தத் திட்டம் வன உயிரிகள் திணைக்களத்தின் முட்டுக்கட்டையால் ஓராண்டு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தின் மூலமாக இந்த குடிநீர் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் குடிதண்ணீர்ப்பிரச்சினை நீண்ட காலமாக பலதரப்பினராலும் பேசப்பட்டது. அதற்குப் பல்வேறு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இரணைமடுவிலிருந்து குடிதண்ணீரைக் கொண்டு வருதல், வடமராட்சி கிழக்கிலிருந்து கடல் நீரை நன்னீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள முன்மொழியப்பட்டபோதும், அதிலுள்ள அரசியல் இழுபறிகள் காரணமாக எந்தவொரு திட்டமும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் ‘மாற்றுக் குடிநீர்த் திட்டம்’ என்ற பெயரில், வடமராட்சி நீரேரியில் உள்ள நீரை குளத்தில் தேக்கி விநியோகிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.