வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! ஆபத்தும் நிறைந்தது இடம் எங்கு தெரியுமா?

மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். இந்த காடுகள் ஆபத்தானவை.

இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் யாரும் மீண்டு வர முடியாது இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.

இத்தனை சிறப்புக்களையும் பல மர்மங்களியும் தன்னகத்தே கொட்டதுதான் அமேசான் காடு. இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்.

அமேசான் நதியின் நீளம் 6,992 கி.மீற்றர்கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறு இதுவாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்களாம்.

அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍ கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது. இங்கு இருக்‍கும் 90 சதவீதத்துக்‍கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை’ என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்‍கு உணர்த்தும்.

அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம், தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும் எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை அங்கு ஏற்படவில்லை.

1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. அமேசான் ஆற்றினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இங்கு இருந்தது.

ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது என்றால் நம்பமுடிகின்றதா? மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் ‘மனவுஸ்’ வரை செல்லலாம்.

சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. ஆனால் பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.

”அமேசான் மழைக்காடுகள்”

அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது. இது சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறமையும் இதன் ஈரப்பதத்திற்கு ஒரு காரணம்.

இப்பகுதியில்தான் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன.

3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன. உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றனவாம்.

எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.

அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்கள். இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமேசான் காடுகளில் வாழும் 215 பழங்குடி குழுக்‍களை சேர்ந்த மக்‍கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்.

இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றமை ஓர் அதிசயம் என்றால், விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே அவர்கள் உண்டு வருகின்றனர். ஏனெனில் இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.

காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். அதோடு ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர். ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.

உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையதாம். .இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும் என்பது எத்தனை பேரிற்கு தெரியும்.

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன. அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்களும் இங்கு ஏராளம். ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன. அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது ‘வாலியா ஹம்சா’ என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்றும் கண்டறியப்பட்டது.

சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறமை சிறப்பம்சம். நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அவர் அறிக்கையினை சமர்ப்பித்தார். அவர் அறிக்கை சமர்ப்பித்த போதும், எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.

குளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது. 4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் இவ்வாறு சூடாகிறது. உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.

இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது. 100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது. விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் அங்கு வெந்து இறப்பது உறுதி.

இது சிறிய ஆறு. ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பிலும் வியப்பு. ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.

வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.