நல்லூரில் தடையை மீறிப்பறந்த ட்ரோன் கேமரா

யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கேமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர் ஆலய உற்சவ காலத்தில் ஆலய சூழலில் எந்தவிதமான ட்ரோன் கேமராக்கள் பறக்க தடைவித்திக்கபப்டிருந்தது.

அத்துடன் தடையினை மீறிப்பறக்கும் ட்ரோன் கேமராக்கள் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் யாழ். மாகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் ஆலய வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த விடயம், யாழ். மாநர முதல்வர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்த ஆலய பரிபாலன சபையினர், இச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து குறித்த செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களைத் அடுத்து ட்ரோன் கேமரா மற்றும் ஆளில்லா விமானங்களை பறக்க விடுதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.