வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக வீதியில் சென்று கொண்டிருந்த வேளை எதிர் திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அவ்வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்றையும் முச்சக்கரவண்டியையும் முறையற்ற விதத்தில் முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.







