இடைநடுவில் தடைப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச பவனி ஆரம்பமாகியது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருமஞ்சத்தின் வடம் தொட்டிழுத்தனர்.

அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் அலங்கார நாயகியாக ஸ்ரீதுர்க்காதேவி வலம் வந்த காட்சி அற்புதமானது.

திருமஞ்ச உலாவில் பெருமளவு அடியவர்கள் கலந்து கொண்டதுடன் பல எண்ணிக்கையான பெண் அடியவர்கள் கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இந்நிலையில் திருமஞ்சம் தேவஸ்தானத்தின் மேற்கு வாசலுக்கு அண்மையாக வருகை தந்த போது திருமஞ்சத்தின் முன்சில்லு சுழலாமல் நின்றது. இதன் காரணமாக சுமார் இரண்டு மணித்தியாலங்கள் திருமஞ்ச பவனி தடைப்பட்டது.

திருமஞ்சத்தை நகர்த்தும் முயற்சியில் ஆலயத் தொண்டர்கள் நீண்டநேரம் முயற்சி செய்தனர்.

குறித்த முயற்சி பலனளிக்காத நிலையில் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஜேசிபி வாகனம் மூலம் திருமஞ்சத்தை நகர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதுவும் பலனளிக்காத நிலையில் ஸ்ரீதுர்க்காதேவி உள்ளிட்ட தெய்வங்கள் திருமஞ்சத்திலிருந்து அவரோகணம் செய்யப்பட்டு அடியவர்கள் தமது தோள்களில் நாற் தெய்வங்களையும் சுமந்து ஆலய இருப்பிடத்தை சேர்ப்பித்தனர்.

இதேவேளை, மேற்படி சம்பவம் துர்க்கையம்பாள் அடியவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் திருமஞ்சம் இடைநடுவில் ஓடாமல் நின்றமை ஏதாவது ஆபத்தின் அறிகுறியா? எனவும் பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.