இலங்கையில் வெறும் 55,000 ரூபாயில் ஜீப் வண்டி உருவாக்கி சாதனை!

வெறும் 55,000 ரூபாயில் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை வாகன திருத்துனர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார என்பவரே இதை உருவாக்கியுள்ளார்.

வாகன திருத்துனராகவும், மேசனாகவும் தொழில் புரிந்துவரும் அவர், தனது ஓய்வு நேரங்களில் குறித்த ஜீப்பை உருவாக்கியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் இயந்திரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஜீப்பில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும் என்பதோடு, குறித்த ஜீப் 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவயதிலிருந்தே ஆட்டோ மொபைல் துறையில் ஆர்வம் கொண்ட அவர், ஏற்கனவே இரண்டு பேர் பயணிக்கக்கூடிய ஜீப், மற்றும் சிறிய ஹெலிகொப்டர் ஆகியவற்றை தயாரித்துள்ளார்.

எனினும், அரசுத்துறைகளில் இருந்து தனக்கு ஊக்கமோ, உதவியோ கிடைக்கவில்லையென தெரிவித்துள்ள அவர், தனியார் அல்லது அரசு நிறுவனம் தனக்கு உதவி செய்தால் இதுபோன்ற பல ஜீப்புகளை சந்தைக்கு தயாரிக்க முடியும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.